search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் நலப்பிரச்சனை"

    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும்.

    சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.

    வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம்.

    உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக அல்லது ஆசன வாய் வழியாக வெளியேறும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப்பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப்பக்கத்தில் வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்குகிறது.

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

    வாயுப் பிரச்சினை தீர உதவும் உணவுப் பழக்கம்:

    1) தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.

    2) உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாயுப்பிரச்சினை குறையும்.

    3) சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, சோற்றில், உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப்பிரச்சினை நீங்கும்.

    4) மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். 5) ஓமத்தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    சித்த மருத்துவத்தில்: 1) ஏலாதி சூரணம் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும். 2) சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் காலை, இரவு சாப்பிட வேண்டும். 3) குன்ம குடோரி மெழுகு 250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உங்கள் உடலின் எந்தப் பகுதியும் பாதிக்கப்படலாம்.
    • சொரியாசிஸ் என்பது வம்ச வழியாக வரக்கூடிய ஒரு மரபணு நிலை.

    சொரியாசிஸ் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இது தடிமனான வறண்ட நிறமாற்றம் செய்யப்பட்ட தோலில் அரிப்பு அல்லது புண் திட்டுகளை ஏற்படுத்தும். உங்கள் உடலின் எந்தப் பகுதியும் பாதிக்கப்படலாம்.

    சொரியாசிஸ் ஆபத்து யாருக்கு அதிகம்?

    சொரியாசிஸ் என்பது வம்ச வழியாக வரக்கூடிய ஒரு மரபணு நிலை. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக திகழ்கிறது. மேலும் அறிகுறி கள் பொதுவாக 15 மற்றும் 35 வயதிற்குள் உருவாகின்றன. சொரியாசிஸ் பிளேக்குகள் பொடுகு போன்ற சில இடங்களில் இருந்து பெரிய வெடிப்புகள் வரை பெரிய பகுதிகளை உள்ளடக்கும். சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:-

    * நிறமாற்றம் பெற்ற திட்டுகள் அல்லது செதில்களால் மூடப்பட்ட தோலின் உயர்த்தப்பட்ட பிளேக்குகள் (Pla que),

    * உலர்ந்த அல்லது வெடிப்பு தோல்.

    *பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் எரிச்சல் அரிப்பு அல்லது புண்.

    *குழி அல்லது தடித்த விரல் நகங்கள் அல்லது கால் நகங்கள்.

    * வீங்கிய மூட்டுகள்

    சொரியாசிஸ் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:

    1) வம்சவழி, 2) மன அழுத்தமும் சொரியாசிஸ்ம் 3) குளிர் காலநிலை, 4) உலர்ந்த சருமம் சருமத்தை காயப்படுத்தும் எதுவும் அதிகப்படியான வறண்ட சருமம் உட்பட சொரியாசிஸ் ஏற்படுத்தும். 5) சில மருந்துகள், 6) மேல் சுவாச நோய்த் தொற்றுகள் (Upper Respiratory Infection) சளி மற்றும் பிற நோய்த் தொற்றுகள் சொரியாசிஸ் ஏற்படுத்தும். * புகைப்பிடித்தல், * மது

    சொரியாசிஸ்சின் கால அளவு

    சொரியாசிஸ் ஒரு நாள்பட்ட துன்ப நிலையாக கருதப்படுகிறது. தற்போது முழுமையான சிகிச்சை இல்லை. ஆனால் இந்த தோல் நோய் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளலாம். சிலருக்கு சொரியாசிஸ் ஒரு நேரத்தில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட தொடர்ந்து இல்லாமல் இருக்கலாம். இது நிவாரணம் என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்கள் சுழற்சி முறைகளில் தடிப்புத் தோல் அழற்சியை அனுபவிக்கிறார்கள்.

    சொரியாசிஸ்கான சிகிச்சை

    சொரியாசிஸ்யை முழுமையாகவும் குணப்படுத்த முடியாது என்றாலும் அதற்கு சிகிச்சையளிப்பதற்கான வழியுள்ளன. நீங்கள் பயன்படுத்தும் சிகிச்சை முறைகளின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

    Dr.A.தேவி சங்கீதா M.D., (DVL), சாந்தி நர்சிங் ஹோம், சுரண்டை

    • பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.
    • பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன

    பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது.

    இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

    நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.

    மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது.

    பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும். மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும். கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது.

    பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும். முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
    • அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

    மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆசனவாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலை சுற்றி உள்ளது வெளி மூலம்.

    இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த கசிவை காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தை பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப்பயணம் போன்றவற்றை தவிர்க்கவும். மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல். நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும். குடல்வால் நோய் ஏற்படும். முதலில் மலச் சிக்கலை தவிர்க்க வேண்டும்.

    உணவில் அகத்திக்கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும். மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம். கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது. மீன், கருவாடு, கோழி கூடாது. மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

    அதிக காரம் கூடாது.ஒரே இடத்தில் நீண்டநேரம் அமரக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் பகுதி வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல் வேண்டும். இவ்வாறு செய்து அதன் பாதிப்பை குறைக்கலாம்.

    • சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை.
    • மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை.

    கோவை புதுசித்தாப்புதூரில் ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டரின் டாக்டர்.S.கோகுலரமணன் கூறியதாவது:-

    கோவை ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் இன்று வலைத்தளங்களில் (online) மிகவும் அதிகமாக காணப்படும் விளம்பரம். Diabetic is reversible? சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இல்லாதவர்களாக மாற முடியுமா? இது சாத்தியமா?

    அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இது சாத்தியம் அல்ல. 5 முதல் 10 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் 10 சதவீதம் நோயின் தன்மையை குறைக்க முடியும். மருந்துகளுக்கான தேவையை குறைக்க முடியும்.

    சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை. மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை. இதில் 2-வது இன்சுலின் செயல்படாத தன்மை இருப்பவர்களுக்கு உடல்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நேரம் தவறாமை உணவு உட்கொள்ளுதல் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை மிகவும் குறைக்க முடியும். கண்மூடித்தனமாக தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, இன்சுலினை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது.

    அன்மைக்காலத்தில் நிறைய சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட்டு, பிற மருத்துவமுறைகளை செய்து சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்க்க வேண்டிய கட்டாயமாகிறது. சர்க்கரை மருந்து, மாத்திரைகளை வேற எந்த மருந்துகளுடனும் எடுத்து கொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 90876 44003, 0422-2522138 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் டாக்டர் S.கோகுலரமணன் பேட்டி

    • நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும்.

    வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.

    நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும்.

    மூட்டு வீக்கம்

    கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.

    கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும்

    உணவு முறைகள்

    மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது.

    மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும்.

    தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும்.

    பழங்கள்

    உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப் பிரயோகம்

    வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும். 100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்.

    • பலர் உடல் வலிகளால் அவதிப்படுவது பெருமளவில் இந்த காலங்களில் தான்.
    • குளிர்கால உடல்வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

    மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை. இந்த காலங்களில் பலவிதமான வெளி நிகழ்வுகளில் பங்கேற்பதும், மழை சாரலில் லேசாக உடல் நனைவதில் ஏற்படும் சுகமான அனுபவங்களும், கிறிஸ்மஸ், நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக வெளியிடங்களுக்கு, குறிப்பாக திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்பதெல்லாம் மனதிற்கு குதூகலம் மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் பல பேர் உடல் வலி, மூட்டு வலிகள், தசை பிடிப்பு, தசைகள் இறுகியது போன்ற உணர்வு, நரம்பு வலிகள் போன்றவற்றில் அவதிப்படுவதும் பெருமளவில் இந்த காலங்களில் தான். இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

    குளிர்காலங்களில் 1. உடலுக்கு தேவையான சூடு குறைவதால், 2. தசைகள் இறுகுவதால் 3. ரத்த ஓட்டத்தில் வேகம் குறைவதால், 4. உடலில் நீர் பிடிப்பு குறைவதால் மற்றும் 5. காற்றின் அழுத்தம் குறைவதால் போன்ற பல காரணங்களினால் வலிகள் ஏற்படுகின்றன.

    குளிர்கால உடல் வலிகளின் அறிகுறிகள் என்னென்ன

    * உடலின் மூட்டுகளில் வலி இடுப்பிலிருந்து குதிகால் வரையில் பரவும் அதீத வலி

    * உடலின் தசைகள் திடீரென்று சுளுக்கு போல் பிடித்துக் கொள்ளுதல்

    * விரல்களின் மூட்டுக்கள் இறுகி வேலை செய்வதில் சிரமம் ஏற்படுத்துதல்

    * தசைகளில் வலி அவ்வப்போது குறுகிய காலத்திற்கு விட்டு விட்டு வந்து போதல் போன்றவை எல்லாம் இந்த குளிர் பனி காலங்களில் ஏற்படக்கூடியது சகஜமே.

    குளிர்காலம் ஏன் தசைகளையும் மூட்டுகளையும் பாதிக்கிறது

    பொதுவாக குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் இதயம் நுரையீரல் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக அளவில் செல்வதை உடல், உறுதி செய்து கொள்கிறது. இந்த நேரங்களில் கை கால்களுக்கு ரத்த ஓட்டத்தில் லேசான தடை ஏற்படலாம். இதனால் அந்த பகுதிகளுக்கு வெப்பம் செலுத்தப்படுவதும் குறைகிறது. இதனால் உடலில் ஒரு வித இறுக்கம் ஏற்பட்டு கை கால்களின் நுனிகள் குறிப்பாக விரல்கள் வலிக்க துவங்குகிறது. பொதுவாக குளிர்காலங்களில் குளிர்சசியினால் காற்றின் வெப்பம் குறைகிறது. இதனால் காற்றின் அடர்த்தி அதிகம் ஆகிறது. இதனால் பேரோமெட்ரிக் ஏர் பிரஷர் என்று அழைக்கப்படும் காற்றின் அழுத்தம் குறைகிறது. இந்த காற்றின் குறைந்த அழுத்தம் நம் உடலின் மூட்டுகளை சுற்றியுள்ள மென் திசுக்களை விரிவடைய செய்கிறது. இதனால் மூட்டுகளின் அசைவுகள் குறைக்கப்பட்டு நமக்கு வலி தோன்றுகிறது. மூட்டுக்கள் மட்டுமின்றி மூட்டு தசைகள் உள்ள பகுதி முழுவதுமே நமக்கு வலிக்கிறது.

    இந்த தசைகள் மற்றும் மூட்டுகள் குளிர் காற்றினால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன

    தசைகளில் மற்றும் மூட்டுகளில் இறுக்கம், குறிப்பாக காலையில் எழும்பொழுது, உடல் சோர்வு, உடல்களில் வீக்கமும் சிவப்புத் தன்மையும் ஏற்படுவது, நடப்பதில் சிரமம், அசைவுகளில் சிரமம், பசியின்மை, வேலை செய்ய பிடிக்காமல் சோம்பல் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

    குளிர்கால உடல்வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி

    குளிர்காலங்களில் நாம் சில விஷயங்களை விழிப்போடு கடைப்பிடிப்போமானால் இந்த மூட்டு தசை வலிகளில் இருந்து நம்மை பெரிதளவும் நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு என்னென்ன செய்யலாம் என்பது கீழ் வருமாறு

    * மிதமான உடற்பயிற்சியை தினமும் செய்வது

    * அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்ப்பது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் உடலுக்கு ஒரு அசைவை கொடுத்து விட்டு அமர வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்து விட்டு வந்து அமர வேண்டும்.

    * போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்

    * வலியுள்ள பகுதிகளை சற்றே உயர்த்தி வைத்திருப்பதும் வலியை குறைக்க உதவும்

    * மூட்டுக்கள் மற்றும் தசைகளை லேசாக மசாஜ் செய்வது. கடுகு எண்ணெய் பூண்டு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யும் பொழுது அந்த தசைகளுக்கு சூடும் கிடைக்கும் ரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படும்

    * கால் கை மூட்டுகளில் வீக்கம் இருக்குமானால் அந்த இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்

    * வீக்கம் இல்லாத நரம்பு வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் மிகுந்த பயனை கொடுக்கும்

    * தினசரி குளிக்கும் பொழுது இளம் சூடான நீரில் குளிப்பது நல்லது அதிக குளிர்ச்சியான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்'

    * மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் குறைவாக இருந்தாலும் அவ்வப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வருவது உடலில் சூட்டை சமன்படுத்த உதவும்.

    * வலி நிவாரணியாக மருந்து எடுத்துக் கொள்வது மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே இருக்க வேண்டும். மிதமான வலிகளுக்கு முடிந்தவரை வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து மருந்துகளை தேர்ந்தெடுத்து எடுத்துக் கொள்ளலாம்.

    * மாற்று மருத்து வலி நிவாரண மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்

    * அக்குபஞ்சர், யோகாசனம் போன்றவையும் குளிர்கால வலிகளை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் உதவும்.

    • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
    • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

    நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

    குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

    இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

    • ரத்தசோகையில் பல நுண் பிரிவுகள் உள்ளன.
    • இரும்புச்சத்து குறைந்தால் ரத்த அணுக்கள் உருவாகாது.

    ரத்தசோகை நோயை ஆங்கில மருத்துவத்தில் அனிமியா என்று அழைப்பார்கள். பொதுவாக இது இரும்புச் சத்து குறைபாட்டால் வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் போதிய சிவப்பணுக்கள் இருக்காது. சிவப்பணுக்கள் உடலில் உள்ள தாதுக்களுக்கு பிராண வாயுவை கொடுத்து உதவுகின்றன. ரத்தசோகையில் பல நுண் பிரிவுகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் சோகை நோயைப் பற்றி பார்ப்போம்.

    இரும்புச்சத்து குறைந்தால் ரத்த அணுக்கள் உருவாகாது. நடைமுறையில் நாம் அதிகமாகப் பார்க்கும் சோகை நோய், இரும்புச்சத்து குறைவதால் வருவதே.

    எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பணுக்கள் உருவாகின்றன. இந்த சிவப்பணுக்கள் உடலில் வியாபித்து 3 முதல் 4 மாதங்களுக்கு வாழ்கின்றன. பிறகு மண்ணீரல் இதை அப்புறப்படுத்துகிறது.

    சிவப்பு அணுக்களில் இரும்புச்சத்து பெரும் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து இல்லை என்றால் ரத்தத்தால் பிராண வாயுவைக் கையாள முடியாது. பொதுவாக உணவில் இருந்தே இரும்புச் சத்து கிடைக்கிறது. நமது உடலில் இரும்புச் சத்தின் சேமிப்பு குறைகிறபோது, ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. சிலருக்கு மூலம் போன்ற நோய்களால் ரத்தம் வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்தம் வெளியேறும்.

    வயிற்றில் குடல் புண் ஏற்பட்டும் ரத்தம் வெளியேறும். ஒரு சிலரின் உடலில் இரும்புச் சத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்காது. குறிப்பாகப் பேறு காலங்களிலும் தாய்ப்பால் ஊட்டுகிற காலங்களிலும் இரும்புச் சத்து அதிகமாகத் தேவைப்படும்.

    ஒரு சில நேரம் உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றால் ரத்தசோகை உருவாகலாம். முடக்குவாதம் போன்ற நோய்களாலும் ரத்தசோகை ஏற்படலாம்.

    கோழிக்கறி, பாசிப்பயறு, பீன்ஸ், மீன், இறைச்சி, சோயா பீன்ஸ், முந்திரிப்பருப்பு, கீரைகள், பேரீச்சம்பழம், வெல்லம், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் கல்லீரல், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

    ரத்தசோகை நோய்க்குத் திராட்சை, ஆடாதொடை, சிற்றமிர்து குடிநீர், மண்டூர வடக மாத்திரை, அயகாந்த செந்தூரம், சோற்றுக் கற்றாழை, இரும்புச் சத்து சேர்த்துச் செய்யப்பட்ட குமாரியாஸவம் போன்றவை பயன் அளிக்கின்றன.

    • இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும்.
    • மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    பருவமழைத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் 'புளூ காய்ச்சல்' அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ரங்கராஜன் கொடுத்த ஆலோசனைகள் இதோ…

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை புளூ காய்ச்சல் வருவது வழக்கமானதுதான். இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதில் இருந்து மீளலாம். குழந்தைப் பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    புளூ காய்ச்சலின் பாதிப்பு எப்படி இருக்கும்? புளூ காய்ச்சல் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. இரண்டு முதல் ஆறு நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண் டைக் கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு 'நிமோனியா' எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். புளூ காய்ச்சலுடன் 'எச்1என்1' எனும் ஒரு வகை இன்புளூயன்சா வைரஸ் கிருமித் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இதற்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    காய்ச்சல் அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

    காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது முதலில் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பம் குறையத் தொடங்கும். பிறகு ஒரே ஒரு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனை, அவசர சிகிச்சை முறைகள் 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. எனவே தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடலில் வேகமாக நீர் இழப்பு ஏற்படும். அந்த நேரத்தில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'ஓ.ஆர்.எஸ் உப்பு சர்க்கரைக் கரைசல்' அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அதுதவிரப் பழச்சாறு வகைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிகள் என்ன? கை கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் பருகலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிய வேண்டும். காய்ச்சல் இருந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    • சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.
    • பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:-

    சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது.

    துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்போது பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது.
    • நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர்.

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது.

    பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

    நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது. ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.

    மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

    2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.

    ×